Monday, January 19, 2009
நான் - நீ = கவிதை
இழந்து பெற்றதில்
எனக்கு
சுகம் ஒன்று இருக்கிறது
உனக்கு பதிலாய்
என் கவிதையை .........
என் கவிதையின்
முதல் வித்து நீதான்
உன் வீட்டு வாசலில்
நீ இட்ட கோலம்தான்
உலகில் மிக
அழகான ஓவியம் .....
தலையாட்டலில் தினம்
நர்த்தனம் ஆடும்
நீ அணிந்த தோடுகள்
சேலையை கூட
அழகாய் அணிய
உனக்கு மட்டுமே தெரியும்
உன் கூந்தலில் இருப்பதால்
ரோஜாவுக்கு
புதுக் களை வந்தது
எனக்கு தினமும் பூபாளம்
உன் கொலுசுச் சத்தம்
அதன் ஒவ்வொரு ஓசையிலும்
புது ஸ்வரங்கள்
உன் பாதம் பட்ட
மணல் துகள்கள் எனக்கு
பொன் துகள்கள்
உன் வண்ணம் எழுதுகையில்
என் பேனா மைக்குப் பதிலாய்
சந்தோசம் நிரப்பிக் கொண்டது
என் கற்பனை குதிரை
காதல் மது அருந்தி விட்டு
தள்ளாடிப் பறந்தது
உன் பார்வை பட்ட போதெல்லாம்
என் இதயம்
ஒலிம்பிக் நூறு மீட்டர்
ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாய் வந்தது
இவ்வுலகில் அழகான பொருட்கள்
எல்லாம் உன்னைப் போலவே தோன்றியது
இத்தனையும் எழுதிய
என் பேனாவில்
கருப்பு மை நிரப்பினேன்
உன் பிரிவில் .........
இருந்தும்
இழந்து பெற்றதில்
எனக்கு சுகம் ஒன்று இருக்கிறது
உனக்குப் பதிலாய்
என் கவிதையை ...............
Subscribe to:
Posts (Atom)