ஒரு தளிர்
முளை விட்டிருந்தது
யாரோ வந்தவர் சொன்னார்
தானாய் வீட்டுக்கு
முன்னாடி மரம் முளைச்சா நல்லதுங்க
சிறு தளிர் தென்றலின்
அலைப்பில் சிரித்தது
வேலி கட்டி பாதுகாக்கையில்
நீருடன் இரத்தமும்
ஊற்ற வைத்தன முட்கள்
வளர்ந்தது என் மகளுடன்
ஊஞ்சல் கட்டி ஆடுகையில்
ஒரு கிளை ஒடிந்தது என்று
அவளை அடித்ததற்கு
என்னை ஒரு மாதிரியாய்
பார்த்தனர் என் வீட்டில்
பூத்து குலுங்கியது
அதுவும்
சிறிதாய் பெரிதாய்
பஞ்சில் நாரில்
விதவிதமாய் கூடுகள்
கருப்பாய் சிவப்பாய்
இரண்டும் கலந்த மாதிரி
பெயர் தெரியாத பறவைகள்
தினமும் கூடுகளில்
குடும்பச் சண்டை என் வீடு போல்
அவங்களை பாரு நாமே தேவலாம்
சிரித்திருக்குமோ ......???
நிழலில் நாற்காலியிட்டு
பேனா பிடிக்கையில்
சிறகு முளைத்தது எனக்கு
ஆத்மார்த்தமாய்
அதனுடன் ஒன்றிப்போனேன்
வெளியூர் சென்று
இரண்டு வாரம் கழித்துவருகையில்
வாடியிருப்பது போல் பட்டது
ஒரு முறை புயலில்
பேயாய்க்காற்று அலைக்கழிக்கையில்
ஜன்னலின் வழியே பார்த்தேன்
விழி ஓரம் நீர் ததும்பியது
கொஞ்ச நாள் கழித்து
அலுவலகத்திலிருந்து வந்து பார்த்த போது
இடம் வெறுமையாய்
மின்துறையின் கைங்கர்யம்
வெள்ளை வெள்ளையாய்
துகள்கள் மட்டும் சதை துணுக்குகளாய்
எவ்வளவு வலித்திருக்கும்
பறவைகளை காணவில்லை
நால்வரின் பசியால்
கூடின்றி அலைந்தன அனைத்தும்
கூடவே என் மனமும்.......
No comments:
Post a Comment